Saturday, June 25, 2011

இரை



மைக்கேல் கிரிக்டன்(Michel Crichton) எழுதிய பிரே(PREY) புத்தகத்தில் இருந்த, அறிமுகப் பக்கத்தில் படித்தது.

பரிணாமம் (Evolution):

முதலில் ஒரு செல் உயிரினம் தோன்றி, படிபடியாக பல உயிரினங்கள் தோன்றின. பரிணாம வளர்ச்சியின் இறுதிக்கட்டத்தில் நாம் (மனிதர்கள்) தோன்றியிருக்கிறோம்.

இன்றும் பரிணாம வளர்ச்சி ஏற்படுகிறதா?

உண்மையை சொல்ல வெண்டுமானால், நம்மைச் சுற்றி ஏற்படும் மாற்றஙகளை நாம் கவனிக்கவில்லை.

ஒரு குறிப்பிட்ட நோய் அழிந்த நிலையில், மீண்டும் வேறு விதமாக புதிய நோயாய் பரவுகிறது. அப்படியானால், நம்முடைய நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிராக, புதிய நோய் கிருமிகளாய் உருவாகி இருக்கின்றன.

பல காலமாய், விலங்குகளும் தாவரங்களும் எந்த மாற்றத்துக்குள்ளும் உள்ளாகவில்லை என்று நினைக்கிறோம். பார்ப்பதற்கு அப்படித்தான் தெரிகிறது. ஆனால், பூச்சிகளின் தொந்தரவுகளுக்கு உள்ளான தாவரங்களுக்கு எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கிறது. அதே போல் பூச்சிகளும் புதிய பரிணாமத்தோடு தாக்குகின்றன.

நாம் உணர்கிறோமோ, இல்லையோ.. இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிரினமும், விலங்குகள், பூச்சிகள், மரங்கள், செடிகள், ஒவ்வொன்றும் மற்ற உயிரினங்களுக்கு தக்கபடி மாறிக் கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு கணமும் பரிணாம மாற்றம் ஏற்படுகிறது என்பது தவிர்க்க முடியாத உண்மை.

நம்மால் இயற்கையை புரிந்துகொள்ள முடிவதில்லை. அது இரு சிக்கலான வலைப் பின்னலைப் போல ஒரு உயிரினக் கோளத்தை(Bio sphere) உருவாக்கி இருக்கிறது. நம்மால் புரிந்துகொள்ள முடியாத இன்னொரு விஷயம், நாம் ஏற்படுத்தும் மாற்றத்திற்கான விளைவுகள்.

கடந்த காலத்தில் கவனமின்றி செய்த தவறுகள் ஏராளம். ஆனால் இன்றும் நாம் சரியாகத்தான் செயல்படுகிறோம் என்று எண்ணுகிறோம். இனியும் நாம் கவனமின்றி தவறுகள் செய்யலாம், என்பதை ஏற்க மறுக்கிறோம். எப்படி சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் கவனமின்றி இருக்கிறோமோ, அதே போல் சுற்றுச்சூழலை காப்பதிலும் கவனமின்றி இருக்கிறோம்.

***

ஒரு உயிரினம் என்பது , தன்னைப் போல் இன்னொரு உயிரினத்தை உருவாக்கக் கூடியது. நம்முடைய  அறிவியல் வளர்ச்சியில், புதிய செயற்கை உயிரினம் உருவாகக் கூடிய சூழல் உண்டு. அந்த சூழல், நானோ டெக்னாலஜி(Nano Technology), பயோ டெக்னாலாஜி(Bio Technology) மற்றும் கம்ப்யூட்டர் டெக்னாலஜி(Computer Technology) சந்திக்கும் இடத்தில் உள்ளது. இந்த மூன்று தொழில்நுடபத்திலும் பொதுவான ஒன்று, தன்னைப் போல் உருவாக்கும் வல்லமை.

கம்ப்யூட்டர் டெக்னாலஜி - ஆர்ட்டிபிஸியல் இன்டலிஜென்ஸ்(Artificial Intelligence) எனப்படும் செயற்கை அறிவுக்கான ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. மேலும் நாம் உருவாக்கிய கம்ப்யூட்டர் வைரஸ்கள் - பல வைரஸ்களை உருவாக்கி, பரவக் கூடிய வல்லமை படைத்தவை.
பயோ டெக்னாலாஜி - மெக்ஸிகோவில் ஜீன்(gene) மாற்றம் செய்யப்பட்ட சோளங்களின் பண்புகள், இயற்கையாக விளைவிக்கப்பட்ட சோளங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
நானோ டெக்னாலாஜி - புதிய தொழில் நுட்பம். மிகச் சிறிய அளவில் (ஒரு முடியின் குறுக்களவை விட சிறியது) இயந்திரங்களையும் பாகங்களையும் உருவாக்குவதில் ஆராய்ச்சிகள் நடைபெருகின்றன. இவை கேன்சர் நோயை அழிப்பதிலிருந்து புதிய போர் கருவிகளை உருவாக்கும் வரையிலான பல ஆராய்ச்சிகள் அடங்கும்.

இந்த தொழில்நுட்பத்தில் உருவானவற்றைக் கட்டுப்படுத்துவதுதான், இன்றளவில் பெரிய பிரச்சினை.

நூறு வருடங்களுக்கு பிறகு ஒரு புதிய செயற்கை உயிரினம் உருவாகலாம். நாம் உருவாக்கலாம். அது  இந்த உலகத்தின் புதிய பரிணாம மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

இறையாகும் முயற்சியில், நாமே இரையாக ஆகாமல் இருந்தால் சரி.

பின் குறிப்பு:

பிரே புத்தகம் படிப்பதற்கு இன்டரஸ்டாக இருக்கும். புதிய தொழில்நுட்ப தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

No comments: