Monday, July 28, 2008

பாத்திரம் அறிந்து பிச்சையிடு

உலகத்தில் எல்லாவற்றிற்கும் ஒரு அளவு உண்டு. அதன்படி ஆராய்ந்து பார்த்தால், தானம் செய்வதற்கும் - அதாவது பிச்சை போடுவதற்கும் ஒரு ‘குறைந்தபட்ச’ (அதிகப்பட்ச) அளவு உண்டு; ஒரு ரூபாய்.

பொதுவிடம் - இரண்டே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் “ பிச்சைக்காரர்கள் உலாவுமிடம்”.

பிச்சைக்காரர்கள் தினந்தோறும் நம்முடைய வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவர்கள். நாமும் விதவிதமான பிச்சைக்காரர்களை சந்திக்கிறோம்.

“கண் தெரியாதவர்கள் (அதிக எண்ணிக்கையில்),
கை கால்களில்லாதவர்கள்,
பக்திப் பாடல்களையும் பழைய பாடல்களையும் பாடுபவர்கள்,
பலவிதமான இசைக்கருவிகளை வாசிப்பவர்கள்,
சாகசங்கள் செய்யும் சின்னஞ்சிறுவர்கள்,
பூகம்பத்திலோ வெள்ளத்திலோ உடைமைகளை இழந்தவர்கள்,
ஊருக்குப் போக முடியாமல் பணத்தை தொலைத்தவர்கள்,
ஒரு குழந்தையை இடுப்பிலும் இன்னொரு சிறுமியை கையில் பிடித்திருக்கும் கர்ப்பிணிப் பெண்கள்,
பசியோடு காட்சியளிக்கும் முதியவர்கள் “
ஏனோ ஊமைப் பிச்சைக்காரர்களை மட்டும் பார்க்க முடிவதில்லை !

அவர்களும் பல விதமான அலைவரிசைகளில் ஒலி எழுப்பி பிச்சை கேட்கிறார்கள். நாமும் பரிதாபப்பட்டோ அல்லது பயந்து போயோ ஒரு ரூபாய் தானம் செய்கிறோம். சில்லறை இல்லாவிட்டால் வேறு வழியில்லாமல் இரண்டு ரூபாயும் கொடுக்கிறோம். (சில நியாயஸ்தர்கள்
“சில்லறை இல்லை” என்ற உண்மையை சொல்லி விடுகிறார்கள்).

அதாவது சட்டைப் பையில் உள்ள மிகக்குறைந்தப்பட்ச காசையே அதிகப்பட்சமாய் தானம் செய்கிறோம்.

சில விசேஷ தினங்களில், (பிறந்த நாள்,திருமண நாள்) கோவிலுக்குப் போய் வரும்போது தாரளமாய் பத்து ரூபாய் வரை தானம் செய்வதுண்டு. இன்னும் சில தர்மவான்கள் அநாதை இல்லத்திற்கோ அல்லது முதியோர் இல்லத்திற்கோ ஒரு வேளை உணவுக்கான தொகையை அளிப்பதுண்டு.

ஒரு சிலர் வேண்டுதல் காரணமாக கோவிலில் உணவோ அல்லது உடையோ தானம் செய்வதுண்டு. இப்படி எல்லோரும் ஏதேனும் வகையில் தானம் செய்து வருகிறோம்.

மேலும் தானம் செய்வதை விமர்சிக்கும் முன், கதையொன்றினை சொல்ல விரும்புகிறேன்.

தானம் பற்றிய கதை


மகாபாரதத்தின் கிளைக் கதையாக இது சொல்லப்பட்டு வருகிறது.

அர்ஜுனன், கிருஷ்ணனிடம் கேட்டான்.
“கிருஷ்ணா, கர்ணன் உண்மையிலே தானம் செய்வதில் மிகச்சிறந்தவனா ! “

“அர்ஜுனா, உனக்கு அதிலென்ன சந்தேகம்”, எனக் கேட்டு கிருஷ்ணன் புன்னகைத்தான்.

“கிருஷ்ணா, உலகத்தில் எல்லா அரசர்களும் தானம் செய்கிறார்கள். தர்மத்தின் மறு உருவமாக விளங்கும் அண்ணன் யுதிஷ்டிரனும் தாரளமாய் தானம் செய்கிறார்.

துரியோதனன் கூட தானம் செய்வதில் சிறந்தவன். அவன் தானே கர்ணனுக்கு நாடளித்தவன்.

இப்படி பல அரசர்கள் தானம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்க,
எப்படி கர்ணன் மட்டும் தானம் செய்வதில் மிகச்சிறந்தவன் ஆவான்?”
, என்று அர்ஜுனன் பேசி முடித்தான்.

“உன்னுடைய கேள்விக்கான விடையை இப்பொழுது நான் கூறுவதை விட, ஒரு போட்டியின் மூலம் கண்டறியலாம்.
அர்ஜுனா, நாளை சூரிய உதயத்தின் போது இங்கு வருவாயாக. உனக்கும் கர்ணனுக்கும் ஒரு போட்டி வைக்கிறேன்."
, என்றான் கிருஷ்ணன்.

அர்ஜுனனும் வியப்போடு திரும்பிச் சென்றான்.
அடுத்த நாள் சூரிய உதயத்தின் போது அர்ஜுனன் அதே இடத்திற்கு வந்த போது, அங்கு தங்கக் குன்று ஒன்று பளபளவென மின்னியது.

கிருஷ்ணன் அவனை ஆவலோடு எதிர்கொண்டு, சொன்னான்.
“இந்த தங்கக் குன்றினைப் பார். இன்று சூரியன் மறைவதற்குள் இத்தனையையும் நீ தானம் செய்ய வேண்டும். போட்டி இதுதான்.”

யாசகம் கேட்பவர்களுக்கெல்லாம் அர்ஜுனனும், அந்த தங்கக் குன்றினை பாளம் பாளமாக வெட்டிக் கொடுத்தான். சூரியன் மறையும் முன் அனைத்தையும் தானமாக கொடுத்து முடித்தான். எதுவும் பேசாமல் வெற்றிச் சிரிப்போடு கிருஷ்ணனைப் பார்த்தான்.

கிருஷ்ணனும் புன்னகையோடு,
“அர்ஜுனா, நாளை கர்ணன் என்ன செய்கிறான் என்று பார்ப்போம்”, என்றான்.

மறுநாள் கிருஷ்ணன் மறுபடியும் தங்கக் குன்றினைப் படைத்திருந்தான். கர்ணனுக்கும் அதே நிபந்தனைகளை விதித்தான். கர்ணன் தங்கக் குன்றுக்கு அருகில் யாசகம் கேட்பவர்களுக்காக காத்திருந்தான். அர்ஜுனனும் ஆவலோடு காத்திருந்தான். அப்பொழுது ஏழை ஒருவன் கர்ணனிடம் வந்தான்.

“கர்ண மகாராஜா உம் கொடையின் கீழ் எல்லோரும் இன்புற்றிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு தொலை தூரத்திலிருந்து வருகிறேன். நானும் என் குடும்பமும் வறுமையில் வாடுகிறோம். தயவுசெய்து எங்கள் வறுமையை போக்கி வளம்பெறச் செய்ய வேண்டும்” , என்றான்.

கர்ணன்,
“இந்த தங்கக் குன்றினை நீயே வைத்துக்கொள்.”
என்று கூறி தங்கக் குன்றினை முழுவதுமாய் தானம் கொடுத்தான். கிருஷ்ணனிடம் விடை பெற்று அந்த இடத்தை விட்டுச் சென்றான்.

கிருஷ்ணன் அர்ஜுனனிடம் திரும்பி,
“நீயும் தங்கக் குன்றினைத் தானம் செய்தாய்; கர்ணனும் அதே அளவுள்ள தங்கக் குன்றினைத் தானம் செய்தான். இப்பொழுது நீயே சொல்; கர்ணன் மட்டும் எப்படி தானம் செய்வதில் மிகச்சிறந்தவன் ?”

இந்தக் கதையை படிக்கும் போது இரண்டு வகையான சிந்தனைகள் தோன்றின.

சிந்தனை - 1:

நாமும் அர்ஜுனனைப் போன்றவர்களே. எத்தனையோ வெட்டிச் செலவுகள் தாரளமாய் செய்தாலும் தானம் செய்வதில் மட்டும் தயக்கம் கொள்கிறோம். சில செலவுகளின் பட்டியல்..

ஒரு முறை டீ அல்லது காபி குடிப்பதற்கான செலவு 10ரூ.
சில பிடித்த திண்பண்டங்களுக்கான செலவு 20ரூ
சினிமா பார்ப்பதற்கான செலவு 100ரூ ( திருட்டு விசிடி / டிவிடி என்றால் 50ரூ).
புதிய துணி வாங்குவதற்கான செலவு 500ரூ - 1000ரூ


இது ஒருவருக்கான சராசரி செலவு மட்டுமே. தேவையே இல்லாமல் செய்யும் எல்லாச் செலவுகளும் வெட்டிச் செலவுகளே. வெட்டிச் செலவுகளை கண்டறிவதும் அதை தானம் செய்வதும் உங்களின் விருப்பம்.

டீ குடிக்கும் போது ஒரு ரூபாயை பிச்சையிட்டும், புதிய துணிகளை வாங்கிக் கொண்டு - பழைய துணிகளை தாரளமாய் தானம் செய்தும், நம்மை நாமே சமாதனப் படுத்திக்கொண்டு - பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

சிந்தனை - 2:

சிந்தனை ஒன்றினைப் படித்து விட்டு, தானம் செய்வதைக் கிண்டல் அடிக்கவே இது எழுதப்பட்டதாக நீங்கள் நினைத்தால் -
அது முற்றிலும் தவறு. வேண்டுமானால் இந்தப் பகுதியின் தலைப்பைப் படித்துப் பாருங்கள் - “பாத்திரம் அறிந்து பிச்சையிடு”.

இன்று பிச்சையெடுத்தலை தொழிலாகவே செய்து வருகிறார்கள். அத்தொழிலில் மூலதனம் செய்யும் பங்குதாரராக உங்களுக்கு விருப்பமா ?

அதனால் ஒரு ரூபாய் கூட பிச்சை போட வேண்டாம். முடிந்தவரை உணவுப் பொருளாகவே வாங்கிக் கொடுங்கள். அதே போல் அநாதை அல்லது முதியோர் இல்லங்களுக்கு உணவுப் பொருளாக கொடுப்பதற்குப் பதிலாக பணமாக கொடுக்கலாம்.

எத்தனையோ பேர் தானம் செய்ய விரும்பினாலும் எப்படி செய்வதென்று தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து நிதி திரட்டி எத்தனையோ நல்லது செய்யல்லாம். முடிந்தால் ஒருவருக்கான கல்விக்கான செலவை ஏற்றுக் கொள்ளலாம்.

இரத்த தானம், சிறுநீரக தானம், கண் தானம் பற்றி கூட சிந்திக்கலாம்.

கருத்து
தானம் செய்வதற்கென்று எந்த அளவுகோலும் இல்லை.
தானம் என்பது கொடுக்கப்படும் பொருளின் அளவைப் பொருத்தது அல்ல.
கொடுக்கின்றவரின் மனதைப் பொருத்தது.

Saturday, June 21, 2008

வாழ்க்கை

வாழ்க்கை

மனித வாழ்வு
ஒரு பெரும் சரிவு...
இழந்து கொண்டே இருப்பதுதான் வாழ்க்கை !

அடையும் ஒவ்வொன்றும்
ஆயிரம் மடங்கு விலை..
விலை ஒவ்வொன்றும்
இளமையில் ஆயிரம் பங்கும் எடை !

இளமையை விற்று
அனுபவங்களை வாங்கிக் கொள்கிறோம் !

இளமை,
வயது
அனையத் தொடங்குகையில்...
தொலை தூரத்தில் ஒரு கனவு,
வெளியென ஒளிபெற்று விரிந்து கிடக்கிறது !

ஏக்கம் மிகுந்த கண்ணீருடன்
இக்கரையில் நின்றபடி -
நம் புண்களையும்,
உதவாத நாணயங்களையும்
எண்ணிக் கொண்டிருக்கிறோம் !

பாரதப் போர் முடிந்து, அர்ஜுனன் ஆற்றங்கரையில் ஆயுதங்களை கழுவியபடி - சிரித்த சிறு வயதுப் பருவத்தையும், இழந்த இளமைக் காலப் போரட்டத்தையும், வெற்றி பெற்ற போர்க்களத்தையும் பற்றிச் சிந்திக்கிறான்.

சாதனைகளையும் இழப்புகளையும் எண்ணிப் பார்க்கையில் வாழ்க்கை என்னவென்றே அவனுக்குப் புரியவேயில்லை.

------------------------------------ *** --------------------------------------------------------
அதிகப்பட்ச ஆயுள் காலத்தில் கால் பகுதி கல்விக்காகவும் வேலை தேடுவதிலும் கழிந்து விடுகிறது.

வேலை கிடைத்து அலுவலகத்திலேயே சிலர் வாழ்கிறார்கள்.

வேறு சிலர் பொருளாதார வேட்டையிலேயே பொழுதைக் கழிக்கிறார்கள்.

சட்டென்று குடும்பம் கடமைகள் என்று மேற்கொள்ளும் விரைவுப் பயணத்தில் வாழ்வின் எல்லையும் வந்துவிடுகிறது.

அப்படியென்றால் வாழ்க்கை ?

ஒரு கவிதத்துவமான வாழ்க்கைக்கான முயற்சி:

வேகமாய் போய்க்கொண்டிருக்கும் வேளையில்
சட்டென்று குறுக்கிடும் சில்லென்ற காற்றுக்காக
ஒரு சில நொடிகள் காத்திருக்கலாம் !

ஒரு முறையேனும் காகிதப் பணத்தைப் பற்றிக்
கவலைப் படாமல் மழையில் நனையலாம் !

ஏதேனும் ஹோட்டலில் மூன்று நாட்கள் தங்கி
கடிகாரத்தையே பார்க்காமல்
தூங்கியும் சாப்பிட்டும் பொழுதைக் கழிக்கலாம் !

ஒரு புத்தகத்தின் கடைசிப் பக்கத்திலிருந்து படிக்கலாம் !

தெரியாத ஊருக்குள் கால் வலிக்க நடக்கலாம் ! “

இப்படி நாமாகவே யோசித்தோ அல்லது வைரமுத்துக் கவிதைகளைப் படித்தோ நாம் வாழ்ந்து பார்க்கலாம்.
ஆனால் வாழ்க்கையென்றால் ?

கவிஞர் கண்ணதாசன் பாடல்

“பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்.
பிறந்து பாரென இறைவன் பணித்தான் !

இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்.
இறந்து பாரென இறைவன் பணித்தான் !

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்.
மணந்து பாரென இறைவன் பணித்தான் !

அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏனெனக் கேட்டேன்.
ஆண்டவன் சற்றே அருகில் வந்து
அனுபவம் என்பதே நான்தான் என்றான் !


இப்பொழுது சொல்லுங்கள் “வாழ்க்கை” என்றால்?

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு


காணாமல் போனவரின் பெயர் சக்கரவர்த்தி. வயது 27. உயரம் 5 அடி, 2 அங்குலம். அவர் நான்கு நாட்களுக்கு முன்பு அலுவலகத்திற்கு சென்றவர் இன்னும் திரும்பவில்லை. அவருடைய செல்போனிற்கு தொடர்பு கொண்டும் பலனில்லை. அவர் காணாமல் போன அன்று வெளிர் பச்சை கலர் கட்டம் போட்ட சட்டையும் பச்சை கலர் பேண்ட்டும் போட்டிருந்தார்.

காணாமல் போனவரின் பெயர் கண்ணன். வயது 25. உயரம் 5 அடி 10 அங்குலம். அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு அலுவலகத்திற்கு சென்றவர் இன்னும் திரும்பவில்லை. அவருடைய செல்போனிற்கு தொடர்பு கொண்டும் பலனில்லை. அவர் காணாமல் போன அன்று வெள்ளை கலர் சட்டையும் கருப்பு கலர் பேண்ட்டும் போட்டிருந்தார்; பாலிஷ் போட்ட பிரவுன் கலர் ஷு வும் போட்டிருந்தார்.

காணாமல் போனவரின் பெயர் கந்தசாமி. வயது 28. உயரம் 5 அடி 3 அங்குலம். அவர் தினமும் காலையில் 9 மணிக்கு அலுவலகத்திற்கு போகிறவர். அங்கேயே தொலைந்து போய்விடுபவர். அதே சமயம், தினமும் இரவு 12.30 மணிக்கு வீட்டிற்கு வந்துவிடுபவர். ஆனால் நேற்று அலுவலகத்திற்கு சென்றவர் இன்னும் திரும்பவில்லை.

காணாமல் போனவர்கள் அனைவரும் ஒரே அலுவகத்தில் வேலை பார்ப்பவர்கள். அதனால் தேவனிடம் வேண்டிக் கொண்டதிற்கிணங்க, துப்பறியும் சாம்பு அந்த அலுவலகத்தில் சேர்ந்து, துப்பு துலக்கினார்.

அவர் அளித்த பகிரங்க ரிப்போர்ட்:

கந்தசாமி - அனைவராலும் நல்லவர் என நம்பப்படுபவர். அவருடைய வேலையை கனக் கச்சிதமாக செய்துமுடிப்பவர். அலுவலகத்திற்கு வெளியே (அதாவது வீட்டில் ! ) எந்த வேலையும் இல்லாததாலும், தோழிகள் யாரும் இல்லாததாலும், பணி நேரம் - (ஆஃபிஸ் டைம் என்றே சொல்லிவிடுகிறேன்). ஆஃபிஸ் டைம் முடிந்தும் மற்ற வேலைகளையும் திறம்பட செய்ய ஆரம்பித்தார். அதனால் சந்தோஷமடைந்த மேனஜரும் அவருக்கு இன்னும் அதிக வேலைகள் கொடுக்க ஆரம்பித்தார். கந்தசாமியும் இரவு 11.30 மணிக்குள் வேலையை முடித்துவிடுவார். இப்படித்தான் தினமும் அவர் அலுவலகத்திலேயே தொலைந்து போய்விடுகிறார்.

கண்ணன் - அனைவராலும் புத்திசாலி என நம்பப்படுபவர். அவரை அலுவலக ஆந்தை என்றே சொல்லலாம். அதாவது பகலில் அலுவலகத்தில் எங்கே என்ன வேலை செய்கிறார் என்று யாராலும் கண்டுபிடிக்க முடிவதில்லை. ஆனாலும் இரவில் கண் விழித்து அனைத்து வேலைகளையும் செய்து முடித்து விடுபவர். இப்படியாக இவரும் அலுவலகத்திலேயே தொலைந்து போய்விடுகிறார்.

அவர்கள் இருவரும் அடிக்கடி மேனஜரிடம் நல்ல பெயர் வாங்குவதை கண்டு - அவ்வப்போது வேறு சிலரும் இரவில் வந்து தாங்களும் தங்கள் வேலைகளை செய்ய ஆரம்பித்தார்கள். அதாவது 10 மணி நேரத்தில் செய்யவேண்டியதை திறமையாக 26 மணி நேரத்தில் முடித்து விடுகிறார்கள்.

அலுவலக கலாச்சாரமும் முற்றிலும் மாறி, எல்லோரும் இரவு பகலும் பிஸியாக வேலை செய்தார்கள். ஒழுங்காக வேலையை முடிக்கும் ஒரு சிலரும் -
சரியான நேரத்தில் கிளம்புவதால் மேனஜரின் முறைப்புக்கும், மற்றவர்களின் ஏளனப் பார்வைக்கும் ஆளானார்கள்.

எல்லோரையும் கவனித்த சக்கரவர்த்தி - தன்னுடைய பெயரை பொன் எழுத்துக்களால் பொறிக்க அதிரடியாக செயல்பட்டார்.

“ பகலில் அடிக்கடி காபி குடித்தும்
ஃபோனில் அரட்டை அடித்தும்
இரவு வரை இன்டர்நெட்டில் உலாவியும்
ஒய்வறையில் படுத்து தூங்கியும்
கொஞ்ச நேரம் வேலை பார்த்தும்
ஒன்றரை நாளில் செய்யவேண்டியதை -
அலுவலகத்தில் தங்கி நான்கே நாளில் வேலையை முடித்துவிட்டார் !”

இவ்வாறு அவர்கள் மூவரையும் கண்டுபிடித்து, வீட்டிற்கு அனுப்பிவைத்தேன். ஆனாலும் அவர்கள் அடிக்கடி தொலைந்து போக வாய்ப்பிருப்பதால் பின்வரும் வழிகளை பின்பற்றலாம்.

1. அதிக நேரம் வேலை பார்ப்பதற்கு கொடுக்கப்படும் ஊக்கத் தொகையை நிறுத்திவிட்டு, இன்டர்நெட்டில் உலாவுவதற்கான பணத்தை வசூலிக்கலாம்.
2. இரவில் தேவையே இல்லாமல் தங்குபவர்களுக்கு வாடகை வசூலிக்கலாம்.
3. பிரம்மச்சாரிகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம்.
4. ஆறு மணிக்கு மேல் தொல்(லை)க்காட்சியில் ஒளிபரப்பாகும் மெகா சீரியல்களை காண்பிக்கலாம்.
5. வேலையில் சேர்வதற்காக வைக்கப்படும் எழுத்து தேர்வை - வேலையில் சேர்ந்தபின் பின்வரும் கணக்குப் புதிரை கேட்கலாம்.

“ 2 பேர் 7 நாட்களில் (ஆஃபிஸ் டைமில்) ஒரு வேலையை முடித்தால், அதே 2 பேர் தொடர்ச்சியாக (எக்ஸ்டிரா டைமில்) அந்த வேலை பார்த்தால் - எத்தனை நாட்களில்
முடிப்பார்கள் ?"


இவற்றையெல்லாம் காரணமாக சொல்லி வேலையை விட்டுவிட்டு, துப்பறியும் தொழிலுக்கே வந்துவிட்டேன்.

குறிப்பு :

இன்ஃபோஸிஸ் நாரயண மூர்த்தி என்ற பெயரில் வந்த கடிதத்தில் இருந்த கருத்தையே வேறு வடிவில் எழுதியிருக்கிறேன். மற்றபடி தேவன் அவர்களையோ சாம்பு அவர்களையோ அல்லது வேறு யாரையுமோ கிண்டல் அடிக்கும் நோக்கத்துடன் அல்ல.

Saturday, May 31, 2008

கடவுள்

ஒரு காபி கடையில் விவாதம் ஒன்று ஆரம்பித்தது. அதிலிருந்து ஒரு பகுதி.

முதலில் ஒரு குருடன் பேச ஆரம்பித்தான்:

“சூரியன் ஒளி திரவம் அல்ல; அப்படியிருந்தால் அதை ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொன்றில் கொட்டிவிடலாம். அது நெருப்பும் அல்ல; நெருப்பாயிருந்தால் தண்ணீரால் அணைத்துவிடலாம். அது வாயு அல்ல; ஏனெனில் அது கண்ணிற்குத் தெரிகிறது. அது திடப்பொருளும் அல்ல; ஏனெனில் அதை நகர்த்தவும் முடிவதில்லை.”


“ஆகையால் சூரியன் திடம், திரவம், வாயு, நெருப்பும் அல்ல. ஆகையால் சூரியன் என்று எதுவும் இல்லை.”

அதற்கு குருடனோடு வந்த வேலைக்காரன் பதிலளித்தான்:

“எனக்கு சூரியனைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் ஒளியை பற்றித் தெரியும். சிறு விளக்கிலிருந்து வரும் ஒளி கூட இருட்டில் வழி நடத்துகிறது. அதனால் ஒளி தரும் எல்லாமே சூரியன்தான்.”

பக்கத்திலிருந்த கால் இல்லாத முடவன் ஒருவன் அதைக் கேட்டுச் சிரித்து,

“உனக்கு எதுவும் தெரியாது போலிருக்கிறது. சூரியன் ஒரு நெருப்பு பந்து. ஒவ்வொரு நாளும் அது காலையில் கடலிலிருந்து கிள்ம்பி மாலையில் அந்த மலையில் மறைகிறது”, என்றான்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த மீனவன் ஒருவன்,

“உங்கள் ஊரைவிட்டு, வெளியே எதையும் பார்த்ததில்லை என்று தோன்றுகிறது. சூரியன் ஒரு நெருப்பு பந்துதான். ஆனால் அது காலையில் கிழக்கு பக்கமுள்ள கடலிலிருந்து கிளம்பி மேற்கு பக்கமுள்ள கடலில் மறைகிறது”, என்றான்.

வயதான கிழவன் ஒருவன், அனுபவம் இல்லாதவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் என்றான். மேலும் அவன் சொன்னான்:
“சூரியன் ஒரு தேவதை. அவர் பொன் மலையான மேருவைத் தன் ரதத்தில் சுற்றி வருகிறார்.”


எகிப்து கப்பல் அதிகாரி ஒருவன் அங்கே இருந்தான். அவன் சொன்னான்:

“நீ சொல்லுவதும் தப்பு. சூரியன் கிழக்கே ஜப்பானுக்கும் அப்பால் உதயமாகிறது. அது மேற்கே இங்கிலாந்துக்கும் அப்பால் மறைகிறது. சூரியன் உலகம் முழுவதும் பிரகாசிக்கிறது. மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அந்த விஞ்ஞானியை கேளுங்கள்.”

அதுவரை அமைதியாக இருந்தவர் பேச ஆரம்பித்தார்:

“நீங்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களை குழப்புகிறீர்கள். சூரியன் பூமியைச் சுற்றிப் போவதில்லை. தினமும் பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது. அதுவும் தவிர இன்னும் சில கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. "

"சூரியன் ஒரு மலைக்காகவே,
ஒரு ஊருக்காகவே மட்டும் பிரகாசிப்பதில்லை.
நமது பூமிக்காக மட்டுமில்லை,
அனைத்து கிரகங்களுக்கும் பிரகாசிக்கிறது.
உங்கள் காலடியில் இருக்கும் தரையை மட்டும் பார்க்காமல்
தலை நிமிர்ந்து வானத்தையும் பாருங்கள்.
புரிந்துகொள்ள முடியும்.”


இவ்வாறு சூரியனைப் பற்றிய விவாதம் முடிந்தது.
------------------------------- **** -----------------------------------
சூரியன் விஷயம் போலத்தான் கடவுள் விஷயமும்.

ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு பிரத்யோகமான கடவுளை கொள்ள விரும்புகிறார்கள். அல்லது தன் தேசத்திற்கு விசேமான கடவுளை நிர்ணயம் செய்கிறார்கள். ஒவ்வொரு மதமும் தன்னுடைய கோவில்களில் தமக்கென்று ஒரு கடவுளை பிரதிஷ்டை செய்து கொள்கிறது. ஆனால் கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர். அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்.


இப்பகுதி “டால்ஸ்டாய் கதைகள்” தொகுப்பிலிருந்து,
“காபிக்கடை சம்வாதம்” என்ற கதையிலிருந்து படிக்கப்பட்டது.