Saturday, June 21, 2008

வாழ்க்கை

வாழ்க்கை

மனித வாழ்வு
ஒரு பெரும் சரிவு...
இழந்து கொண்டே இருப்பதுதான் வாழ்க்கை !

அடையும் ஒவ்வொன்றும்
ஆயிரம் மடங்கு விலை..
விலை ஒவ்வொன்றும்
இளமையில் ஆயிரம் பங்கும் எடை !

இளமையை விற்று
அனுபவங்களை வாங்கிக் கொள்கிறோம் !

இளமை,
வயது
அனையத் தொடங்குகையில்...
தொலை தூரத்தில் ஒரு கனவு,
வெளியென ஒளிபெற்று விரிந்து கிடக்கிறது !

ஏக்கம் மிகுந்த கண்ணீருடன்
இக்கரையில் நின்றபடி -
நம் புண்களையும்,
உதவாத நாணயங்களையும்
எண்ணிக் கொண்டிருக்கிறோம் !

பாரதப் போர் முடிந்து, அர்ஜுனன் ஆற்றங்கரையில் ஆயுதங்களை கழுவியபடி - சிரித்த சிறு வயதுப் பருவத்தையும், இழந்த இளமைக் காலப் போரட்டத்தையும், வெற்றி பெற்ற போர்க்களத்தையும் பற்றிச் சிந்திக்கிறான்.

சாதனைகளையும் இழப்புகளையும் எண்ணிப் பார்க்கையில் வாழ்க்கை என்னவென்றே அவனுக்குப் புரியவேயில்லை.

------------------------------------ *** --------------------------------------------------------
அதிகப்பட்ச ஆயுள் காலத்தில் கால் பகுதி கல்விக்காகவும் வேலை தேடுவதிலும் கழிந்து விடுகிறது.

வேலை கிடைத்து அலுவலகத்திலேயே சிலர் வாழ்கிறார்கள்.

வேறு சிலர் பொருளாதார வேட்டையிலேயே பொழுதைக் கழிக்கிறார்கள்.

சட்டென்று குடும்பம் கடமைகள் என்று மேற்கொள்ளும் விரைவுப் பயணத்தில் வாழ்வின் எல்லையும் வந்துவிடுகிறது.

அப்படியென்றால் வாழ்க்கை ?

ஒரு கவிதத்துவமான வாழ்க்கைக்கான முயற்சி:

வேகமாய் போய்க்கொண்டிருக்கும் வேளையில்
சட்டென்று குறுக்கிடும் சில்லென்ற காற்றுக்காக
ஒரு சில நொடிகள் காத்திருக்கலாம் !

ஒரு முறையேனும் காகிதப் பணத்தைப் பற்றிக்
கவலைப் படாமல் மழையில் நனையலாம் !

ஏதேனும் ஹோட்டலில் மூன்று நாட்கள் தங்கி
கடிகாரத்தையே பார்க்காமல்
தூங்கியும் சாப்பிட்டும் பொழுதைக் கழிக்கலாம் !

ஒரு புத்தகத்தின் கடைசிப் பக்கத்திலிருந்து படிக்கலாம் !

தெரியாத ஊருக்குள் கால் வலிக்க நடக்கலாம் ! “

இப்படி நாமாகவே யோசித்தோ அல்லது வைரமுத்துக் கவிதைகளைப் படித்தோ நாம் வாழ்ந்து பார்க்கலாம்.
ஆனால் வாழ்க்கையென்றால் ?

கவிஞர் கண்ணதாசன் பாடல்

“பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்.
பிறந்து பாரென இறைவன் பணித்தான் !

இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்.
இறந்து பாரென இறைவன் பணித்தான் !

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்.
மணந்து பாரென இறைவன் பணித்தான் !

அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏனெனக் கேட்டேன்.
ஆண்டவன் சற்றே அருகில் வந்து
அனுபவம் என்பதே நான்தான் என்றான் !


இப்பொழுது சொல்லுங்கள் “வாழ்க்கை” என்றால்?

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு


காணாமல் போனவரின் பெயர் சக்கரவர்த்தி. வயது 27. உயரம் 5 அடி, 2 அங்குலம். அவர் நான்கு நாட்களுக்கு முன்பு அலுவலகத்திற்கு சென்றவர் இன்னும் திரும்பவில்லை. அவருடைய செல்போனிற்கு தொடர்பு கொண்டும் பலனில்லை. அவர் காணாமல் போன அன்று வெளிர் பச்சை கலர் கட்டம் போட்ட சட்டையும் பச்சை கலர் பேண்ட்டும் போட்டிருந்தார்.

காணாமல் போனவரின் பெயர் கண்ணன். வயது 25. உயரம் 5 அடி 10 அங்குலம். அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு அலுவலகத்திற்கு சென்றவர் இன்னும் திரும்பவில்லை. அவருடைய செல்போனிற்கு தொடர்பு கொண்டும் பலனில்லை. அவர் காணாமல் போன அன்று வெள்ளை கலர் சட்டையும் கருப்பு கலர் பேண்ட்டும் போட்டிருந்தார்; பாலிஷ் போட்ட பிரவுன் கலர் ஷு வும் போட்டிருந்தார்.

காணாமல் போனவரின் பெயர் கந்தசாமி. வயது 28. உயரம் 5 அடி 3 அங்குலம். அவர் தினமும் காலையில் 9 மணிக்கு அலுவலகத்திற்கு போகிறவர். அங்கேயே தொலைந்து போய்விடுபவர். அதே சமயம், தினமும் இரவு 12.30 மணிக்கு வீட்டிற்கு வந்துவிடுபவர். ஆனால் நேற்று அலுவலகத்திற்கு சென்றவர் இன்னும் திரும்பவில்லை.

காணாமல் போனவர்கள் அனைவரும் ஒரே அலுவகத்தில் வேலை பார்ப்பவர்கள். அதனால் தேவனிடம் வேண்டிக் கொண்டதிற்கிணங்க, துப்பறியும் சாம்பு அந்த அலுவலகத்தில் சேர்ந்து, துப்பு துலக்கினார்.

அவர் அளித்த பகிரங்க ரிப்போர்ட்:

கந்தசாமி - அனைவராலும் நல்லவர் என நம்பப்படுபவர். அவருடைய வேலையை கனக் கச்சிதமாக செய்துமுடிப்பவர். அலுவலகத்திற்கு வெளியே (அதாவது வீட்டில் ! ) எந்த வேலையும் இல்லாததாலும், தோழிகள் யாரும் இல்லாததாலும், பணி நேரம் - (ஆஃபிஸ் டைம் என்றே சொல்லிவிடுகிறேன்). ஆஃபிஸ் டைம் முடிந்தும் மற்ற வேலைகளையும் திறம்பட செய்ய ஆரம்பித்தார். அதனால் சந்தோஷமடைந்த மேனஜரும் அவருக்கு இன்னும் அதிக வேலைகள் கொடுக்க ஆரம்பித்தார். கந்தசாமியும் இரவு 11.30 மணிக்குள் வேலையை முடித்துவிடுவார். இப்படித்தான் தினமும் அவர் அலுவலகத்திலேயே தொலைந்து போய்விடுகிறார்.

கண்ணன் - அனைவராலும் புத்திசாலி என நம்பப்படுபவர். அவரை அலுவலக ஆந்தை என்றே சொல்லலாம். அதாவது பகலில் அலுவலகத்தில் எங்கே என்ன வேலை செய்கிறார் என்று யாராலும் கண்டுபிடிக்க முடிவதில்லை. ஆனாலும் இரவில் கண் விழித்து அனைத்து வேலைகளையும் செய்து முடித்து விடுபவர். இப்படியாக இவரும் அலுவலகத்திலேயே தொலைந்து போய்விடுகிறார்.

அவர்கள் இருவரும் அடிக்கடி மேனஜரிடம் நல்ல பெயர் வாங்குவதை கண்டு - அவ்வப்போது வேறு சிலரும் இரவில் வந்து தாங்களும் தங்கள் வேலைகளை செய்ய ஆரம்பித்தார்கள். அதாவது 10 மணி நேரத்தில் செய்யவேண்டியதை திறமையாக 26 மணி நேரத்தில் முடித்து விடுகிறார்கள்.

அலுவலக கலாச்சாரமும் முற்றிலும் மாறி, எல்லோரும் இரவு பகலும் பிஸியாக வேலை செய்தார்கள். ஒழுங்காக வேலையை முடிக்கும் ஒரு சிலரும் -
சரியான நேரத்தில் கிளம்புவதால் மேனஜரின் முறைப்புக்கும், மற்றவர்களின் ஏளனப் பார்வைக்கும் ஆளானார்கள்.

எல்லோரையும் கவனித்த சக்கரவர்த்தி - தன்னுடைய பெயரை பொன் எழுத்துக்களால் பொறிக்க அதிரடியாக செயல்பட்டார்.

“ பகலில் அடிக்கடி காபி குடித்தும்
ஃபோனில் அரட்டை அடித்தும்
இரவு வரை இன்டர்நெட்டில் உலாவியும்
ஒய்வறையில் படுத்து தூங்கியும்
கொஞ்ச நேரம் வேலை பார்த்தும்
ஒன்றரை நாளில் செய்யவேண்டியதை -
அலுவலகத்தில் தங்கி நான்கே நாளில் வேலையை முடித்துவிட்டார் !”

இவ்வாறு அவர்கள் மூவரையும் கண்டுபிடித்து, வீட்டிற்கு அனுப்பிவைத்தேன். ஆனாலும் அவர்கள் அடிக்கடி தொலைந்து போக வாய்ப்பிருப்பதால் பின்வரும் வழிகளை பின்பற்றலாம்.

1. அதிக நேரம் வேலை பார்ப்பதற்கு கொடுக்கப்படும் ஊக்கத் தொகையை நிறுத்திவிட்டு, இன்டர்நெட்டில் உலாவுவதற்கான பணத்தை வசூலிக்கலாம்.
2. இரவில் தேவையே இல்லாமல் தங்குபவர்களுக்கு வாடகை வசூலிக்கலாம்.
3. பிரம்மச்சாரிகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம்.
4. ஆறு மணிக்கு மேல் தொல்(லை)க்காட்சியில் ஒளிபரப்பாகும் மெகா சீரியல்களை காண்பிக்கலாம்.
5. வேலையில் சேர்வதற்காக வைக்கப்படும் எழுத்து தேர்வை - வேலையில் சேர்ந்தபின் பின்வரும் கணக்குப் புதிரை கேட்கலாம்.

“ 2 பேர் 7 நாட்களில் (ஆஃபிஸ் டைமில்) ஒரு வேலையை முடித்தால், அதே 2 பேர் தொடர்ச்சியாக (எக்ஸ்டிரா டைமில்) அந்த வேலை பார்த்தால் - எத்தனை நாட்களில்
முடிப்பார்கள் ?"


இவற்றையெல்லாம் காரணமாக சொல்லி வேலையை விட்டுவிட்டு, துப்பறியும் தொழிலுக்கே வந்துவிட்டேன்.

குறிப்பு :

இன்ஃபோஸிஸ் நாரயண மூர்த்தி என்ற பெயரில் வந்த கடிதத்தில் இருந்த கருத்தையே வேறு வடிவில் எழுதியிருக்கிறேன். மற்றபடி தேவன் அவர்களையோ சாம்பு அவர்களையோ அல்லது வேறு யாரையுமோ கிண்டல் அடிக்கும் நோக்கத்துடன் அல்ல.