Tuesday, December 31, 2013

2013


இந்த வருடம் திரும்பிப் பார்த்தால் அலுவலக வேலைதான். அதற்கிடையிலும் சின்ன சின்ன சந்தோஷங்கள்.

பாலகுமாரன்


இந்த வருடம் எனக்குப் பிடிச்ச முக்கியமான நிகழ்வு - எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களை புத்தகக் கண்காட்சியில் சந்தித்ததுதான். பிடித்த புத்தகம் 'என் கண்மனித் தாமாரை' புத்தகம் வாங்கி - அதில் அவரோட ஆட்டோகிராஃப் !


கொடைக்கானல்

உயிர் பிழைத்து திரும்பி வந்த டிரெக்கிங் - வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதது. ஒரு நாள் இரவு முழுவதும் குளிரில் நடுங்கியபடி, ஒரு மரத்துக்கடியில் இருந்தது. எல்லாமே அவ்வளவுதான்கிற போது - அன்று காலையில் பார்த்த அந்த விடியல் - அழகான அற்புதமான ஒரு நிகழ்வு!

Sunday, August 25, 2013

நாகேஷ்



சர்வர் சுந்தரம் படம் பார்த்தபின் எழுதும் பதிவு இது. இது நிச்சயம் விமர்சனம் அல்ல. அவரின் நகைச்சுவையைத் தாண்டி, நான் ரசித்ததைப் பகிர்கிறேன்.

அதில் உள்ள சில காட்சிகள் மனதை உலுக்கி எடுத்தது. வறுமையை இவ்வளவு நிஜமாக 'அப்பாவித்தனமாக' நடித்திக்காட்டி இருக்கிறார், நாகேஷ்.

நண்பன் வீட்டில் பார்க்கும் விலை உயர்ந்த சட்டையை தடவிப்பார்க்கும் காட்சி, அதன் விலையை கேட்டு வியக்கும் காட்சி, கீழே விழும் ஐந்து பைசாக் காசைத் திரும்பத் திரும்ப எடுக்கும் காட்சிகள் - வறுமையை வட்டம் போட்டு காண்பிக்கும்.

முன்பெல்லாம், சார்லி சாப்ளின் படங்கள் சிரிப்பை ஊட்டும் விதமாக இருந்தன. ஆனால் இப்பொழுதெல்லாம் அதன் பின்னால் சார்லி சாப்ளின் காண்பிக்கும் வறுமைதான் தெரிகிறது.

அப்படித்தான் இருந்தது சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ் அவர்களின் நடிப்பு.

அதே போல்தான், திருவிளையாடல் படத்தில் 'தருமி'யாக உலாவரும் காட்சிகள். நகைச்சுவைக் காட்சியாயினும், தருமியின் வறுமையும், பரிசில் காட்டும் ஆசையும், கடைசியில் அவரடையும் அவமானமும் - என்னைச் சிரிக்க வைப்பதில்லை. அந்தக் காட்சிகளில் அவர் 'நடிகர்' திலகத்தை மிஞ்சியதாகவே, எனக்குத் தோன்றும்.

எதிர் நீச்சல் படம் முழுக்கச், சார்ந்து வாழும் ஒரு வாலிபனின் ஏழ்மை வாழ்க்கை வாழ்ந்து காட்டியிருப்பார் நாகேஷ். ஒரு பைத்தியத்தைக் கூடத் திருமணம் செய்து கொள்ளத் தயார்படுத்திக் கொள்ளுவது - நிச்சயம் நல்ல நகைச்சுவை!

பொருளாதாரத்தில் முன்னேறி இருப்பவர்கள் கூட்டத்தில் தான், வறுமையில் வாடுபவன் பளிச்செனத் தெரிகிறான். அவன் படும் அவமானம் சிரிப்பூட்டும் காட்சிகளாக தெரிவது - என்ன வகை அதிசியம் என்று புரியவில்லை!

நாகேஷ் ஒரு சிறந்த நடிகர். அவருடைய இருப்பிடம் இன்றும் நிரப்பபடாமல், தமிழ் சினிமா உலகம் வறுமையில் வாடுகிறது.


Sunday, August 18, 2013

மலையில் ஒரு இரவு


கொடைக்கானல் டிரக்கிங் போனதைப் பத்தி எழுதனும்னு ஆசை. 'உயிர் பிழைச்சோம்' -ங்கிற இரண்டு வார்த்தையை எப்படி விவரிக்கிறது. கோர்வையாய் எழுதி புரிய வைக்கமுடியுமா?
சில விஷயங்களை அனுபவிக்கனும். அனுபவிச்சாக்கூட புரிஞ்சுக்கமுடியுமான்னு தெரியலை.
அதனால சில கேள்விகள், அதன் பதில்கள்.

******

என்னதான் கத்துக்கிட்டீங்க?

ஒன்னுமே இல்லை.

வீட்டுக்கு வந்தவுடன் இப்படித்தான் யோசிச்சேன். "எல்லோர் மீது அன்பா இருக்கனும். உதவியா இருக்கனும்".

எத்தனை தடவை இந்த மாதிரி யோசிச்சிருப்பேன். ஆனால், நம்ம மீது செலுத்தற அன்பை கூட உதாசினப்படுத்தினது தானே உன்மை. தேவையே இல்லாத கோபம், வெறுப்பு! எல்லாமே நமக்குதான்கிற பேராசை. இதெல்லாம் மாத்திக்கிட்டு, சுயநலமில்லாம அன்பா இருக்கமுடியுமா?

கடைசி வரைக்கும் ஒன்னுமே கத்துக்கமாட்டோம். கத்துக்கிறதுக்கு, சாவைப் பக்கத்தில பார்க்கனும்னு அவசியமே இல்லை!

*****

பயம் ?

இனிமேல வழி இல்லை, திரும்பவும் மலை மேல் ஏறனும்னு சொல்லும் போது, சாயுங்காலம் மணி 5 இருக்கும். அப்பதான் முதல் பயம் முளைச்சது.

இருட்டறதுக்குள்ள ஏறனும்னு சொன்னதும், ஏறிடலாம்னு ஒரு எண்ணம் இருந்திச்சு. எல்லோரும் 'முடியுமான்னு' கேட்கலை (யோசிச்சிருப்போம்), ஆனால் வேகமா ஏறிக்கிட்டே இருந்தோம்.

சாதரணமாவே முள்ளுக் குத்திடும்னு பயம் இருக்கும். முள்ளுச்செடின்னு தெரிஞ்சும் அதைக் கையில் பிடிச்சு ஏறவேண்டியதாயிருந்தது.

கோரைப்பு புல்லைப் பிடிச்சுக்கிட்டு செங்குத்தாக மலை ஏறும்போது, துபே சார் தடுமாறும் போதெல்லாம், எனக்கும் பயம்தான்.

கொஞ்ச நேரம் நான்தான் கடைசியா வந்தேன். "கீழே விழுந்தால், கண்டுபிடிக்ககூட முடியாதே"! அப்புறம் கிருஷ்ணாதான் கடைசியா வந்தான். எனக்குப் பின்னாடி 'கிருஷ்ணா' இருக்கான்கிறதுதான், என்னோட முழு தைரியம்.

ஆனால் அவனுக்குப் பின்னாடி யாருமே இல்லைங்கிறது, என்னோட மிகப்பெரிய பயம். அவன் அசால்ட்டா ஏறினதால், அவ்வளவா கவலைப்படலை.
கடைசியா ஒரு மரத்துக்கு கீழ் ஓய்வெடுத்தோம். இனி ஏற முடியாதுன்னு சிலர் சொன்னாலும், எனக்கு ஏறிடனும்னு ஆசை. அங்க இரவு பூரா தங்கினால், குளிர் தாங்க முடியுமா! மழையை நினைச்சாலே, பயம்தான். நல்லவேளை மழை வரலை.

எனக்குத் தெரிஞ்சு எலோருக்கும் பயம் இருந்தது. எப்பாடியாவது ஏறிடனும்கிற எண்ணத்தில்தான், முக்கால்வாசி தூரம் அன்று இரவே ஏற முடிந்தது.
பயப்படறது கோழைத்தனம் இல்லை. அதையும் மீறி ஏறினதுதான் வீரமா(Courage), நான் நினைக்கிறேன்

******

நம்பிக்கை?

காலையில் மூன்று இட்லி ஒரு வடை சாப்பிட்டது. மழைக்காலம். குளிரும் மலை, இருட்டு. மரத்துக்கடியில் நாங்க. 'விடிஞ்சா உயிரிடுப்போம்கிறது' தெரியலை. அப்பதான் நம்பிக்கை 'ஒளிக் கற்றையாக' வந்தது.

ரமேஷ் சாரோட, காரின் ஹெட்லைட் வெளிச்சம், மேலே இருந்து 'முதல் நம்பிக்கையாய்' வந்தது. அவங்க எப்படியாவது தேடி வந்தால் பரவாயில்லைன்னு இருந்தது.

அப்பப்ப செல்போனில் பேசின ரமேஷ் சார், ரங்கா சார் குரல்தான் சின்ன நம்பிக்கையாய் காதில் ஒலிச்சது.

எங்களைத் தேடி வந்தவங்களோட ( சுரூர், கிராமத்துக்காரர் ஒருவர்) விசில் சத்தமும், தூரத்தில் தெரிஞ்ச டார்ச்லைட் ஒளி வட்டம்தான், அந்த ஒட்டுமொத்த இரவுக்கான வெளிச்சமாய் இருந்தது.

அவங்க எங்களைக் கண்டுபிடிச்சிடுவாங்க; அவங்க கொண்டு வர போர்வையைப் போர்த்துக்கிடலாம்னு, எண்ணத்தில்தான் நான் தூங்கவே செஞ்சேன்.

விடியற்காலையில், இருட்டு சுத்தமாய் வெளுத்துப் போயி, வானம் கொஞ்சமாய் சிவந்தது; நாங்க இருந்த இடத்திற்கு எதிரில் பார்க்கமுடிந்தது. 'பிழைச்சோம்' கிற முழு நம்பிக்கை.

அந்த விடியல், ஒரு அற்புதமான விடியல்.

*****

சின்னச் சின்ன சுவராஸ்யங்கள் ?

என்னை அட்டைப் பூச்சி கடிச்ச உடனே, கிருஷ்ணா ஃபோட்டோ எடுக்க ஆரம்பிச்சிட்டான் வழக்கம்போல. கூட ராமன் சாரும் சேர்ந்திட்டாரு.

கிருஷ்ணாவையும் மாமுவையும் (துபே சார்) கூட்டிக்கிட்டு வரதுக்குள்ளாற, ஐயைய்யோ.., ஃபோட்டாவா பிடிச்சுத் தள்ளிட்டாங்க.

மாமூ ஏற முடியாம ஏறும்போது கூட, நாகராஜனைத் திட்டிக்கிட்டே வரார்.

ராமன் சார்தான் நம்பர் 1. கிடு கிடுன்னு ஏறிப்போய்கிட்டே இருந்தாரு!



உண்ணி வழக்கம் போல 'பொறுப்பு'. அந்த இரவு "இன்னும் ஒரு மாசாத்தில் கல்யாணம்னு" பொறுப்புணர்ச்சியின் சிகரம்.

திலக் எப்பவுமே சீரியஸா ஜாலியா இருப்பான்.

"ஒரு பெண்ணாலா இதெல்லாம் முடியுமா?" அப்படீன்னு கேள்வி கேட்கறது மடத்தனம்னு, புரியவைக்கிறது - மாலதி.

ஜோயல் சொன்ன டிரக்கிங் கதைகள்தான், தங்கியிருந்த இரவில் சுவராஸ்யமானது. ஏங்க முன்னாடியே சொல்லலைன்னு கேட்டால், "நான் சொன்னால், எங்க கேட்கறீங்க" ன்னு சொல்றார்.

ரெஸ்க்யூ(Rescue) டீம் கொண்டு வர்ற, பிரியானில லெக் பீஸ் தனக்குத்தான்னு கிருஷ்ணா சொன்னதுதான், அந்த நேரத்து சிரிப்பு.

மாமூ நைட்டு பூரா குடை பிடிச்சுக்கிட்டே உட்கார்ந்திருக்கிறாரு.

அந்தக் குளிரிலும் கண்ணு சொக்குச்சு பாருங்க! அதுதான் தூக்கம்.

*****

ஜாலியான டிரிப்பா? அல்லது அட்வென்ச்சரா?

ஆறு மணி நேர டிரக்கிங்னு நினைச்சுக் கிளம்பும் போது நல்லாத்தான் இருந்தது. மலையில் இருந்து கீழ் இறங்கிறவரைக்கும் ஜாலிதான். அப்புறம், எதிர்பாராத அட்வென்ச்சர்தான் (பிழைச்சிட்டோம்ல).

*****

முதல் கேள்விக்கு எனக்குப் பிடித்த பதில்.

கொடைக்கானல் விட்டு கிளம்பும் போது, கடைசியா எல்லாக் குழைந்தைகளும் என் முதுகுல நல்லா அடிச்சாங்க. அப்ப ஃபீல் (feel) பண்ணியது.

Life is so Beautiful (வாழ்க்கை மிகவும் அழகானது).

Saturday, March 23, 2013

சில நேரங்களில் சில மனிதர்கள்



ஜெயகாந்தன் அவர்களின் சில நேரங்களில் சில மனிதர்கள் புத்தகம் - நம் சமூகத்தின் சவால் என்றுதான் படித்தவுடன் தோன்றியது.

அதற்கு முன் அவருடைய சிறுகதை 'அக்னிப் பிரவேசம்' படித்துவிட்டேன் (முதலில் அந்த சிறுகதையைப் படியுங்கள்).

ஒரு கல்லூரியில் படிக்கும் பெண், மழைக்காக ஒருவருடன் காரில் செல்கிறாள். அவள் அசட்டுப்பெண் போல் இருந்ததால், அவன் அவளைக் கற்பழிக்கிறான். அந்தப் பெண்ணின் அம்மாவுக்கு தெரிந்ததும், அதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறி, தலையில் தண்ணீர் ஊற்றி, எல்லா அழுக்கும் போய்விட்டது என்கிறாள்.

இந்தச் சிறுகதை அக்காலத்தில் ஒரு பெரிய புரட்சியாக இருந்திருக்கிறது. பாவம், ஜெயகாந்தன் அவர்கள், ஏராளமாய் திட்டு வாங்கி இருகிறார்!

ஒருவேளை அவளுடைய அம்மா, அவள் கற்பிழந்ததை மறக்கவில்லையென்றால்? ஊர்முழுதும் தெரிந்திருக்கும். அப்புறம். அதுதான் சில நேரங்களில் சில மனிதரகள் கதை!

நல்ல நாவல்! ஜெயகாந்தன் அவர்களின் சிறந்த படைப்பு.

அந்த கதையில் எனக்குள் உண்டான சில (புரட்சிகரமான! ) எண்ணங்களுக்காக, இந்த பதிவு.

******

கற்பு

கற்பிழத்தல் என்பது சாக்கடைக்குள் விழுந்தது போல்தான். குளித்தால் உடல் நாற்றம் போய்விடும். மனம் எப்பொழுதும் சுத்தமாகத்தான் இருக்கும்! தேவையெல்லாம் மனம் மாற்றம்தான்!


திருவள்ளுவர் கோபித்துக்கொண்டாலும் பரவாயில்லை. கற்பு என்ற வார்த்தையை அகராதியில் இருந்து நீக்கி விடுவோம். அந்த வார்த்தையின் கவர்ச்சியால், கலாச்சாரம் காப்பற்றப்பட்டதோ இல்லையோ, பாவம்! சிலர் மட்டும் அவதிக்குள் மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

அது வெறும் மாயை என்று பெண்களும், பின் நாமும் புரிந்துகொள்ள வேண்டும்.

புரட்சி

இந்தக்கதை எனக்குப் புரிய வைத்த மிக முக்கியமான விஷயம். புத்திசாலிகளின் மிகப்பெரிய முட்டாள்தனம், இந்த சமூகத்தின் முட்டாள்தனத்தை தனியே எதிர்ப்பது.

இங்கு எல்லோரும் முட்டாள்கள் என்று முதலில் தோன்றும் பின், ஏதோ புரட்சி செய்வதாய் எண்ணிகொண்டு எல்லோரிடம் திமிராய் (அவர்கள் பார்வையில்) நடக்கவேண்டி இருக்கும். அதனால் இங்கு எதுவும் மாறப்போவதுமில்லை.

புரட்சி என்ற விஷயமே பெரும் சவால்தான். சமூகத்தில் இருந்து விலகி நின்றோ, அல்லது எதிர்த்து நின்றோ எதையும் மாற்ற முடியாது!
நிச்சயம் அது தனி மனிதனால் செய்யப்படுவதில்லை. குறைந்தப்பட்சம், அதை நம்பகூடிய சில முட்டாள்களாவது தேவை! அல்லது சில முட்டாள்தனமான செயல்களால்தான் மாற்றத்தை உருவாக்க முடியும்.

குறைந்தபட்சம் இந்தப் பதிவுகள் எழுதுவதன் மூலம்!

Friday, January 25, 2013

புத்தக கண்காட்சி



இந்த வருடம் (2013), புத்தக கண்காட்சி நந்தனம் YMCA மைதானத்தில் நடந்தது. நல்ல பெரிய திடல். பொறுமையாக புத்தகம் பார்ப்பது என்று முடிவு செய்ததால், மூன்று முறை ஐந்தைந்து வரிசையாக புத்தகங்களைப் பார்வையிட்டேன்.

பொஙகல் அன்று, பிரபு சார், ரங்கா சார், கமல் உடன் போயிருந்தேன். முக்கியமாய் எழுத்தாளர் ராம்கிருஷ்ணன் பேச்சைக் கேட்கவே சென்றிருந்தேன்.

பிரபு சார் அவர் பொண்ணுக்கு மால்குடி டேஸ் புத்தகங்களை வாங்கினாரஎப்பொழுதும் போல் வித்தியாமாக கணக்கு சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாங்கியிருந்தார். ரங்கா சார்  தன் பொண்னுக்கு ஏகப்பட்ட புத்தகங்களை வாங்கினார். கமல் சே-குவாரா, லெனின், ஓஷோ புத்தகங்களைப் பார்த்துவிட்டு, இந்திரா சௌந்திரராஜன் புத்தகங்களை வாங்கினான்.

*****

ராமகிருஷ்ணன் அவர்கள் கதைகளைப் பற்றி பேசினார். கதைகள் நாடு விட்டு நாடு போன கதைகளையும், சொல்லாமல் விடப்பட்டதால் வெளிவரக் காத்திருந்த கதையையும் கூறினார். "காலியாக இருந்த நாற்காலிகளைக் காட்டி, இதில் நிறைய கதைகள் இருக்கின்றன; நம் எல்லோருக்குமே கதையின் பாத்திரமாக ஆகும் ஆவல்தான், கதைகளாகத் திரிகின்றன" என்றார்

"கதையில் எவ்வளவு கற்பனை இருக்க வேண்டும்? உணவில் எப்படி உப்பு தேவையான அளவு இருக்க வேண்டுமோ, அதுபோல் கதையில் கற்பனை தேவையான அளவு இருக்கவேண்டும்" என்றார்.

*****

மாட்டுப்பொஙகல் அன்று நானும் அம்மாவும் போயிருந்தோம். அம்மா எல்லாவற்றையும் ஆச்சர்யாமாக பார்த்துவிட்டு ஒரு புத்தகத்தை வாங்கினார்கள்; ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் புத்தகத்தை விரும்பியதால், அதையும் வாங்கினோம்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை சுபம் (நண்பர் சுப்பிரமணியன்), அவர் மனைவியோடு வந்திருந்தார். நாங்கள் சுற்றிப்பார்த்து விட்டு கலைவாணி அவர்கள் கேட்ட (வலசை, ஒன்றுக்கும் உதவாதவன், பசித்த பொழுது) புத்தகங்களை வாங்கிக்கொண்டோம்.

இறையன்பு எழுதிய பத்தாயிரம் மைல் பயணம் புத்தகத்தை சுபம் வாங்கினார். மகாபாரத மனிதர்கள் காட்டும் மகத்தான வாழ்க்கை புத்தகத்தை சுபம் எனக்கு வாங்கிக் கொடுத்தார்.

*****

எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் திருமகள் பதிப்பக ஸ்டாலுக்கு வந்திருந்தார். கங்கைகொண்ட சோழன் புத்தகம் வாங்கலாம் என்றால், இல்லையென்று சொல்லிவிட்டார்கள்.

எனக்குப் பிடித்த "என் கண்மனித் தாமரை" புத்தகத்தை வாங்கி, அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கினேன். அவரைப் பார்க்கவேண்டும் என்ற நெடுதாள் ஆசை நிறைவேறியது (இதற்கு இன்னொரு பதிவு எழுதவேண்டும்).


*****

ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய புத்தகம் எதுவும் வாங்கவில்லையென்றாலும், அவர் பரிந்துரை செய்த புத்தகங்களை வாங்கிய திருப்தி.

வாங்கிய புத்தகங்கள் :-

வாடிவாசல் - சி.சு.செல்லப்பா
நாளை மற்றும் ஒரு நாளே ஜீ.நாகராஜன்
புத்தம் வீடு - ஹெப்ஸியா ஜேசுதாசன்
வாசவேஸ்வரம் கிருத்திகா
நித்யகன்னி எம்.வி.வெங்கட்ராம்
பசித்த மானுடம்  கரிச்சான்குஞ்சு
கடல்புரத்தில்  வண்ணநிலவன்
ஏழாம் உலகம் - ஜெயமோகன்
புயலிலே ஒரு தோணி ப.சிங்காரம்
தென்னாட்டுச் செல்வங்கள்
கி.ரா வின் நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்
சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்
மகாபாரத மனிதர்கள் காட்டும் மகத்தான வாழ்க்கை - குர்சரண் தாஸ்
என் கண்மனித்தாமரை - பாலகுமாரன்
முன்பே வா அன்பே வா - பாதை நண்பர்களின் புக்கிசை நாவல்