பிரமிள் அவர்களின் மொழிபெயர்ப்பு
கதை
"போர்ஹேயும் நானும்" படித்த பின்:
போர்ஹே இப்படித்தான் சிந்தித்திருப்பாரோ!
*****
எனக்கு பிடித்த எழுத்தாளர்கள்
எழுதிய புத்தகத்தில் பிடித்த விதமாய் பல இருந்தாலும், சில விஷயங்கள்
குழப்பமாய் இருக்கின்றன.
சிலவற்றைப் படிக்கும் போது
குழப்பமே எஞ்சுகிறது. ஆனாலும் பலரும் பாராட்டும் காரணத்தால்,
மீண்டும் புரிந்து கொள்ள முயற்சிப்பதை மட்டும் கைவிடுவதில்லை.
சில சமயம் ஒவ்வொரு வார்த்தைகளின் அர்த்தத்தையும்
கோர்த்து 'இப்படி இருக்குமோ' என்றும் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அச்சமயங்களில்
அதைப் பாராட்டவும் முடியாமல், பிறர் பாராட்டும் போது மறுக்கவும்
முடியாமல், ஏற்படும் குழப்பத்தையும் தவிர்க்க முடிவதில்லை.
சில வாசகர்களின் குழப்பமான
கடிதங்களைக் கண்டிக்கும் எழுத்தாளர்களின் பதில்கள் சுவராஸ்யமானவை. குறிப்பாய்
அந்த வாசகர்களின் கடிதங்கள் ஆரம்பம் முதல் முடிவு வரை தெளிவில்லாமல் ஒன்றுக்கொன்று
தொடர்பில்லாமல் இருக்கும். அவர் அந்தப் புத்தகங்களை முற்றிலும்
புரிந்துகொண்டதாய் எழுதியிருப்பார்.
அதற்கான பதில்களில் வாசகர்களை
கிண்டலடிக்கும் வாக்கியங்கள் "நம்மையும் திட்டுவது"
போன்ற பிரமையும் ஏற்படும்.
பிரமிப்பூட்டும் பல விஷயங்கள்
எல்லோருக்கும் புரியும்படியாய் இருப்பதில்லை. பெரும்பாலும் குழம்பியபடியே,
தெளிவாய் இருப்பது போல் காட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
"எல்லோருக்கும் எதுவும் தெளிவாய்
தெரிவதில்லை" என்பது மட்டுமே குழப்பமே இல்லாத ஒன்றாய் இருக்கிறது.
No comments:
Post a Comment