Saturday, February 5, 2011

எல்லோரும் பார்க்கிறார்கள்


யாரோ கூப்பிடுவது போலிருந்தது.

அவனுக்கு அதை யோசிக்க ஒரு கணம் கூட இல்லை.

பின்னால் அஞ்சு போலிஸ் கார் துரத்துகிறது. மேலே கெலிகாப்டர், வட்டமாய் வெளிச்சம் போட்டு அவன் காரை காண்பித்தது. வேறு வழியில்லாமல் பக்கத்திலிருந்த ஸ்டேடியத்திற்குள் காரை ஓட்டினான். பின்னால் சைரன் சத்தம்.

ஸ்டேடியத்திலிருந்து வெளியே வரும் போது.. மீண்டும் யாரோ கூப்பிடுவது போலிருந்தது. திரும்பி பார்த்தான், ஜன்னல் வழியே கூப்பிடும் சத்தம்.

திரும்பி கம்ப்யூட்டர் மானிட்டரை பார்ப்பதற்குள், எதிரே வந்த போலிஸ் கார் மோதி.. சுற்றி வளைத்து விட்டார்கள். ( ‘NFS most wanted’ game விளையாடிப் பாருங்க).

எழுந்து ஜன்னல் பக்கம் போனான். ஜன்னல் வழியே பார்க்கும் போது, ரயில்வே ஸ்டேசன் நுழைவாயில் தெரிந்தது. நிறைய பேர் நின்று, அவர்கள் அபார்ட்மெண்டையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ கத்திக் கொண்டிருந்தார்கள்.

அவனுக்கு ஸ்டேசனை வேடிக்கை பார்ப்பது பிடிக்கும். எப்பொழுதும் யாரேனும் போய்-வந்து கொண்டிருப்பார்கள். வயதானவர்கள் படிக்கட்டு ஓரக் கைப்பிடித்து மெதுவாக நடக்கும் போது, சிலர் ரெண்டு ரெண்டு படிக்கட்டுகளாய் தாவுவது வித்தியாசமாக இருக்கும்.

சட்டென்று இவனைப் பார்த்துக் கத்தினார்கள். நிறைய பேர் கையை வலது பக்கம் ஆட்டிக் காண்பித்தார்கள். ஒன்றும் கேட்கவிலை. ஒன்றும் புரியவில்லை.

"அக்கா.. அக்கா.. இங்கே பாரேன். ஒரே கூட்டமாயிருக்கிறது"

*****

அவள் நெயில் பாலிஸ் போட்டுக் கொண்டிருந்தாள்.

நகக் கலரில் இருந்தது. ரங்கநாதன் ஸ்டிரீட்டில் வாங்கியது. அதற்கே அம்மாவின் அட்வைஸ் கேட்க வேண்டியிருந்தது. எல்லாப் பெண்களும் எப்படியிருக்கிறார்கள்!

மோதிர விரல் நகத்துக்கு பாலிஸ் போடும் போதுதான் கமல் கூப்பிட்டான்.

"அக்கா.. அக்கா.. இங்கே பாரேன். ஒரே கூட்டமாயிருக்கிறது"

இவனுக்கு வேற வேலையே இல்லை. ஸ்டேசனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு ஏதேனும் சொல்ல வேண்டியது.

அவளுக்கு ஜன்னல் வழியே ஸ்டேசனைப் பார்ப்பது பிடிக்காமல் போய் விட்டது.  

பெண்கள் அழகாய் டிரஸ் போட்டுக் கொண்டு வருவார்கள். ஜீன்ஸ் டீ-சர்ட். அம்மாவிடம் கேட்டதற்கு திட்டுகிறாள். ஜீன்ஸ்-குர்தா டீசண்டாகத்தான் இருக்கிறது. ஆனால் அம்மாவுக்கு புரியப் போவதில்லை. இன்னும் துப்பட்டாவை ஒழுங்கா போடுவதில்லை என்று குறை சொல்கிறாள். யார் இப்போதெல்லாம் துப்பட்டா போட்டுக்கொண்டு வருகிறார்கள்!

சுண்டு விரலுக்கு நெயில் பாலிஸ் போடும் போது, கமல் மறுபடியும் கூப்பிட்டான். இவன் நச்சரிப்பை இனி தாங்கமுடியாது.

விரல்களை மடக்கி, நெயில் பாலிஸ் மீது ஊதியபடியே ஜன்னல் பக்கம் போனாள்.

கமல் சொன்னது சரிதான். எல்லோரும் அவர்கள் பில்டிங்கையே வேடிக்கை பார்ப்பது தெரிந்தது. பாதி பேர் அந்தப் பக்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தன்னைப் பார்த்து கத்துவதும் சைகை செயவதும் தெரிந்தது. ஏதோ பிரச்சினை. அம்மாவை கூப்பிடுவது நல்லது. இல்லாவிட்டால் இதற்கும் கத்துவாள்.

"அம்மா.. அம்மா.. இங்கு வாயேன்"

*****

கிச்சனில் நின்று கொண்டிருந்தாள். குக்கரில் இன்னொரு சத்தம் வந்தால் இறக்கி வைத்து விடலாம். தாளித்து விட்டால் குழம்பு ரெடி. பார்த்து பார்த்து வாங்கிய ஃபிளாட்டுதான், ஆனால் கிச்சன்தான் சின்னது. ஒரு பாத்திரத்தை எடுத்தால் இன்னொன்று கையில் இடிக்கிறது. வாங்கியாயிற்று.. இருந்துதானே ஆக வேண்டும்.

"அம்மா.. அம்மா.. இங்கு வாயேன்" சுமதியின் குரல் கேட்டது.

கழுதை வயசாகி விட்டது, இன்னும் சின்னப் பெண்ணாகவே இருக்கிறாள். பார்க்க லட்சணமாய் இருக்கிறாள். அதுதான் பயமாயிருக்கிறது.

சுமதி உள்ளே வந்தாள். "அம்மா.. ஸ்டேசன்ல ஒரு கூட்டமா, நம்ப பில்டிங்கை பார்த்து சத்தம் போடுறாங்க"

அந்த ஸ்டேசனை கண்டாலே பிடிக்கவில்லை. ஜன்னல் வழியே எங்கு பார்த்தாலும் ஜோடியாக இருக்கிறார்கள். நெருக்கமாய் உட்கார்ந்துக்கிட்டு, கையை பிடிச்சுக்கிட்டு, அப்படி என்னதான் பேசுவார்களோ! அந்த பெண்களைப் பெற்றவர்கள் பாவம்தான். கன்றாவி. அன்னிக்கொருத்தன் முத்தம் கொடுக்கிறான். நல்லவேளை சுமதி காலேஜுக்கு போயிருந்தாள்.

“அம்மா ஏதோ பிரச்சினை போலிருக்கிறது”

"எனக்கு நிறைய வேலை இருக்குது. உங்க அப்பாட்ட போயி சொல்லு"

*****

அவள் சுமதியிடம் சொல்வது நன்றாகவே கேட்டது. ரிமோட் கண்ட்ரோலை சோபாவில் வைத்து விட்டு கிச்சன் பக்கம் போனார்.

"என்னம்மா சுமதி. வா.. போய் பார்க்கலாம்"

அந்த ரயில்வே ஸ்டேசன் அவருக்கு பிடிச்ச விஷயம். எத்தனை முறை ஆபிஸீக்கு அடிச்சு பிடிச்சு அந்த ஸ்டேசனில் டிரைன் பிடித்திருக்கிறார். ஸ்டேசன் பக்கம் பிளாட் கிடைத்த போது எவ்வளவு சந்தோஷமாயிருந்தது. வாங்கியவுடன் தான் எத்தனை பெருமை. சென்னையையே விலைக்கு வாங்கியது போல்!

ஆமாம். நிறைய பேர் இருந்தார்கள். கூச்சல் போடுவது பார்த்தால், பக்கத்தில் ஏதோ பிரச்சினை. வெளியே போய் பார்க்கலாம்.

"என்னங்க, வாசல்ல ஓடுற சத்தம் கேட்குது. போய் பாருங்க. திருடன் யாராவது வந்திருக்கப் போறான்" அவர் மனைவி கூப்பிட்டாள்.

நல்ல வேளை. வெளியே கிரில் கேட் பூட்டியிருக்கிறது. நாலு பேரும் வாசல் பக்கம் போனார்கள்.

*****

நானும் பிரபு சாரும் புத்தகக் கண்காட்சி போய்விட்டு, கையில் புத்தக பேக்கோடு ஸ்டேசன் வாசலில் நுழைந்தோம். நிறைய பேர் நின்று, சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்த பில்டிங்கில் ஒரு ஃபிளாட்டில் நெருப்பு. சின்னதுதான். பாத்திரம் ஏதாவது பத்தி எரிந்து கொண்டிருக்க வேண்டும். லைட் எரிவதை பார்த்தால், வீட்டில் நிச்சயம் யாராவது இருக்க வேண்டும். ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை.

அப்பொழுதுதான், நாலு ஜன்னல் தள்ளி ஒரு  பையன் எட்டிப் பார்த்தான். எல்லோரும் அவனைப் பார்த்துக் கத்தினார்கள். அவன் உள்ளே போய், இன்னொரு பெண்ணோடு வந்தான். என்ன கத்தியும், அவர்களுக்கு புரியவில்லை.

மறுபடியும் இன்னொருவர் வந்தார். அதற்குள் அந்த நெருப்பை, வீட்டிலிருந்தவர்கள் அனைத்துவிட்டார்கள். புகை வந்தது.

ஜன்னல் வழியே பார்த்தவர்கள் வீட்டிற்குள் போய் விட்டர்கள்..
வேடிக்கை பார்த்தவர்களும் கலைந்து விட்டார்கள்..
புகை மட்டும் கொஞசமாய் வந்து கொண்டிருந்தது..